திருவாரூர்; திருவாரூரில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கன மழை காரணமாக, மரக் கிளை முறிந்து விழுந்ததுடன் இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் வடக்கு வீதி, பிடாரிக் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. குறிப்பாக நன்னிலத்தில் 5 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
மின் கம்பிகள் மீது விழுந்து கிடக்கும் அரச மரத்தின் கிளை
இந்த கனமழை காரணமாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதி பிடாரி கோயில் தெருவில் பழமையான அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதன் காரணமாக திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலை ஓரத்தில் உள்ள இரண்டு இரும்பு மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருவாரூர் மின்சார வாரியத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்துள்ள மின்வாரியத்தினர் மின்கம்பிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு வீதி, பிடாரிக் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் கன மழை காரணமாக மயிலாடுதுறை சாலை ஓரத்தில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள்.
மேலும், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மரக்கிளை முறிந்து விழுந்த நேரம் அதிகாலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.