திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடத்த மன்றத் தலைவர் எம். சாம்பசிவம், துணைத் தலைவர் சிவ. வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, கம்பர் தெரு கனகாங்கித மகா மாரியம்மன் கோயில் மண்டபத்திலிருந்து, கஞ்சி கலய ஊர்வலத்தை, வட்டாரத் தலைவர் க.நாகராஜன் முன்னிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்டத் தலைவர் பி.எஸ்.வாசன், தொடங்கி வைத்தார். ஊர்வலம், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, சேகரை, பனங்காட்டாங்குடி, பாண்டுக்குடி, வடபாதிமங்கலம், பழையனூர், வேளுக்குடி, வாழாச்சேரி, அத்திக் கடை மற்றும் பொதக்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து 600 க்கும் மேற்பட்டவர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, கோயிலை வந்தடைந்தனர்.
அம்பாளுக்கு மகாதீபாராதனைக் காண்பித்து, நைவேத்தியம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கலசத்தில் கஞ்சியும், அன்னதானமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நிர்வாகிகள் கே.வி.சுரேந்திரன், பி.முருகையன், வி.எஸ்.நெடுமாறன், எம். வல்லரசன், ஆர்.கேசவன் மற்றும் நிர்வாகிகள்,பக்தர்கள் கவனித்தனர்.