வழக்கமாக, தன்னை சுற்றி சுற்றி, ஓடி ஓடி வந்து புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், அனைவரையும் ஒன்றாக திரட்டி அவர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் எடுத்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த புகைப்படக் கலைஞர்களின் புகைப்படம் வெளியாகி பலருக்கும் புன்முறுவலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில், பலரும் இதுவரை யாருக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு என்று அழகாக சிரித்தபடி போஸ் கொடுக்க, ஒரு சிலரோ வெற்றிச் சின்னங்களை காண்பித்தபடியும், சிலர், தங்களை புகைப்படம் எடுக்கும் முதல்வரை புகைப்படம் எடுத்துக்கொண்டும் உள்ளனர்.
உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை சிறப்பிக்கும் வகையில் இன்று முகாம் அலுவலகத்தில், அப்புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
உலக புகைப்பட தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்! என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.