சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 3 போலி மருந்துகள் கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,306 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, உயா் ரத்த அழுத்தம், இரைப்பை அழற்சி, காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 51 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன. அவற்றுடன் 3 மருந்துகள் போலியாக இருந்ததும் தெரியவந்தது.
அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.