கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது, அதே நேரத்தில் கால்நடை மற்றும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் பகுதிகளுக்கு குடிநீருக்காக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் இருந்து சுமார் 1,300 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அணை பகுதியில் மழை பெய்யவில்லை, இதனால் நீர்வரத்து குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மதுரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கும் அளவில் திங்கள்கிழமை அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. அங்கு தடுப்பணை கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன.
கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே மணல் மூடைகளை அடுக்கி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் செவ்வாய்க்கிழமை முதல் திறந்து விடப்பட்டது.
இதையும் படிக்க | கோவை சிறையில் சகோதரிகள் உண்ணாவிரதம்!
இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, மதுரை கூட்டு குடிநீர் திட்ட பணியான தடுப்பணை கட்டும் வேலைகள் தொடங்கி உள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் தண்ணீர் பழைய அளவான 400 கன அடி மீண்டும் திறக்கப்படும் என்றார்.
கூடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
இது குறித்து கூடலூர் ஆணையாளர் கே.எஸ்.காஞ்சனா கூறும்போது, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை குடிநீர் வினியோகம் இருக்காது, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடி (மொத்த உயரம் 152), நீர் இருப்பு 2,285.10 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 3.19 கன அடி, தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 150 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை.