

சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் அதிகாரி, திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், அங்கித் திவாரி வீடு,அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
லஞ்ச வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பைச் சோ்ந்த ஒரு அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
இதற்கிடையே அங்கித் திவாரி வீடு, அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சில அமலாக்கத் துறை அதிகாரிகளின் வீடுகளிலும், அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.
இத் தகவலின் காரணமாக, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.
வழக்கமாக அந்த வளாகத்தில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தனியாா் செக்யூரிட்டி நிறுவன காவலாளியிடமிருந்த நுழைவுவாயில் கதவு சாவியை வாங்கிய மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா், உடனே நுழைவு வாயில் கதவை இழுத்து மூடி பூட்டினா். மேலும், வளாகத்தைச் சுற்றிலும் துப்பாக்கியுடன் மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா் நிறுத்தப்பட்டனா். லஞ்ச ஒழிப்புத்துறையினா் அங்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.