சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியதில் கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மிக்ஜம் புயல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் எரிவாயு நிரப்பும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!
ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை அதிகயளவில் பெய்து வருவதால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கிண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூறாவளி கனமழைக்கு வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடி வரை வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.