
சென்னை: சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறு இரவுமுதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், மின்சாரம் இல்லாமல் செல்போன் டவர்களும் செயல்படாததால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தொலைத் தொடர்பிலும் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது மழைநீர் வடிந்து வருவதால் பல இடங்களில் நேற்று காலைமுதல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், இணைய சேவைகளில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் இணைய சேவை பாதிப்பாலும், பணம் நிரப்பப்படாததாலும் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளும் இயங்காத சூழல் நிலவுவதால், பணமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
தற்போது சென்னையில் படிப்படியாக நிலைமை சீராகி வருவதால், இன்று ஏடிஎம் இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.