மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (9-12-2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும், இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை புறநகரில் பல ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார் வந்துள்ளதால் ரொக்கமாக நிவாரணம் என்றும் பல ரேஷன் அட்டை தாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் நிவாரணத்தை ரொக்கமாக தர முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.