மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தினமணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், பாரதி நினைவு இல்லத்தில் இருந்து, பாரதி அன்பர்கள், பள்ளி மாணவர் - மாணவிகள் பாரதியார் வேஷமணிந்தும், பாரதி பாடல்களை பாடியவாறும் மணிமண்டம் நோக்கி ஊர்வலம் சென்றனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த ஊர்வலத்தில், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அனுஷியா தலைமையில் மாணவிகள் பங்கேற்றனர். தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமையில் பாரதி வேஷமணிந்த மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.