ஸ்ரீபெரும்புதூர்: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
ஆந்திரா முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார்.
அவருக்கு இந்து சமய அறநிலையத்துறையினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். திருக்கோயில் யானையான கோதைக்கு பேரிச்சம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ராமானுஜர் சன்னதி, ஆதிகேசவ பெருமாள், தாயார் சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை பூஜைகள் மேற்கொண்டார். அருளச்செயல் கோஷ்டியினருக்கு வஸ்திர தானம் செய்தார். திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசியது:
“ராமானுஜர் திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் சீர்திருத்த கருத்துக்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டியது.” எனத் தெரிவித்தார்.
மேலும், மக்களின் வரவேற்பு குறித்து தெரிவிக்கையில் மக்களுக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை அவர்கள் நமக்கு திருப்பி செய்வார்கள் எனவும், தெலுங்கானாவில் நடைபெற்றது போல் ஆந்திராவிலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.