சென்னை: சென்னை, நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யுஜிசி நெட் மறுதேர்வானது நாளை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான படிப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, நாடு முழுவதும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அன்றைய தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திரத்தின் நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது.
இதன்காரணமாக புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் டிசம்பர் 14-ஆம்(நாளை) தேதி மறுதேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரிவான விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 01140759000 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.