தூத்துக்குடி: வங்கக்கடலில் சுழல் காற்று சுமார் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல் காற்றானது 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசக் கூடும் என்பதாலும், கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவித்துள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கவும், மீன்பிடி சாதனங்களை பத்திரமாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்று முதல் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், விசைப்படகுகள், பைபர்படகுகள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.