நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டிய கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில்கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் சாரல் மழை பெய்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதையும் படிக்க | கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை: அருவியில் குளிக்கத் தடை
நாகர்கோவில் மாநகரில் இடைவிடாது பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி, மீனாட்சிபுரம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை ஆகிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்கள். இதனால் நாகர்கோவில் நகர சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.