விழுப்புரம்: விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் தங்களுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி அசோக்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக அப்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு,ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் (ஏககாலம்) தண்டனை விதிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | தென் மாவட்ட மக்களை காப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!
தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. சார்பில், அவர்களது வழக்குரைஞர்கள் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மேல்முறையீட்டுத் தொடர்பாக தங்கள் தரப்பில் வாதாடுவதற்கு டிசம்பர் 11-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி அசோக்தாஸ் ஆஜரானார்.
அப்போது, நீதிபதி ஆர். பூர்ணிமா, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாததத்தை தெரிவிக்குமாறு கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்ட்டிருப்பதால், கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார்.