நெல்லை தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்றும், பாலத்தின் மீது பொதுமக்கள் நின்று பார்வையிடவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதனையொட்டியுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. வெள்ளநீர் காரணமாக பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன.
வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை கொக்கரவலம் பகுதியில் குடியிருப்புகளில் சிக்கி உள்ளார்களை படகுமூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரவருணி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.