மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) பெய்த தொடர் கனமழை காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறிப்பாக நெல்லை மாநகரம், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்திறந்துவிடப்பட்டிருந்ததால், ஆற்றங்கரையோரம் இருந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நெல்லை ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தேங்கிய நீரால், நெல்லை வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது மழை அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தாமிரவருணி ஆற்றின் நீர்வரத்தும் குறையத்தொடங்கியுள்ளது.
ரயில் நிலையத்தில் தேங்கியுள்ள நீரை கனரக மோட்டார்கள் கொண்டு மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது. மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடியும் வரை ரயில் நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.