தென் தமிழகத்தில் வெள்ளம் வடிந்த பின் சேதம் கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழை பாதுகாப்பு மற்றும் அதன் மீட்பு பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"பெருமழை பெய்யும் என்று கணித்து கூறவில்லை. ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 9 ஹெலிகாப்டர்கள் மூலம் 11 முறை 13,500 கிலோ உணவுப் பொருள்கள் விநியோகிப்பட்டுள்ளது. நெல்லையில் 64,900 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகள், மின் கம்பிகள் பழுதானதால் உடனே மின்சாரம் வழங்க இயலவில்லை.
வெள்ள பாதிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, சேதத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும். விமானப்படை, கடற்படை உதவியுடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது" என்று சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.