தமிழில், 'நீர் வழிபடூஉம்' நாவலை எழுதிய எழுத்தாளர் தேவி பாரதி, சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு, எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கி வரும் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற தேர்வாகியிருக்கிறார். இவரது இயற்பெயர் ராஜசேகரன்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வருகிறார். இவரது நிழலின் தனிமை என்ற நாவல் மிகச் சிறந்த நாவலாக அறியப்படுகிறது. மேலும், அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட பல படைப்புகளை இவர் தந்துள்ளார். அருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவு செய்த பலி என்ற சிறுகதை சிறப்பு வாய்ந்தது.
இதையும் படிக்க: சாகித்ய அகாதெமி விருது பெறுவதில் மகிழ்ச்சி: தேவி பாரதி
இவரது மூன்றாம் நாவல்தான் நீர்வழிப் படூஉம். இந்த நாவல், சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அதனால் அவனுடன் இந்த சமூகம் கொள்ளும் உறவையும் உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்வதாகும்.
எளிமையான மக்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல் எழுத்தில் கொண்டு வருவதில் வள்ளவராக இருப்பவர் எழுத்தாளர் தேவி பாரதி.
ஆரம்பக்கட்டத்தில் பள்ளி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய தேவி பாரதி, பிறகு முழு நேர படைப்பாளியாக மாறினார். இவர் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.