திருப்பூர்: திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுந்தஏகாதசி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான வைகுந்தஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி பகல்பத்து பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 17-ஆம் திருப்பள்ளி எழுச்சியும், வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலம், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வைகுந்தஏகாதசி பெருவிழாவானது சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஸ்ரீ வைஷ்ணவ வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மூலவர் அருள்மிகு வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 5.30 மணி அளவில் கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் சொர்கவாசல் வழியாகப் பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு கருடசேவை திருவீதியுலாவும், இரவு 8 மணி அளவில் இராபத்து உற்சவ ஆரம்பமும் நடைபெறுகிறது. முன்னதாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு ஒரு லட்சத்து 8 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.