கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த நிலையில், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் சனிக்கிழமை விநாடிக்கு 300 கன அடியாக இருந்தது, அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்ததால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து 1,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, அதாவது ஒரேநாளில் 1000 கன அடி தண்ணீர் கூடுதலாக திறந்து வைக்கப்பட்டது.
மின்சார உற்பத்தி அதிகரிப்பு
சனிக்கிழமை 300 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை 1,300 கன அடியாக வெளியேற்றப்பட்டதால் மின்சார உற்பத்தி 117 மெகாவாட்டாக உற்பத்தியானது.
அணை நிலவரம்
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,230 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!