சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை செயல்பட மீண்டும் அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணூரில் கோரமண்டல் இண்டா்நேஷனல் லிமிடெட் என்ற தனியாா் உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. இதில் உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, குழாயில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து இனி தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அந்த உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை செயல்பட மீண்டும் அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்த பின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது என்றும் நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கும் குழு ஒப்புதல் தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர் அடங்கிய குழு தொழிற்சாலையை ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.