தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நடிகர் டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கண்மாய், குளங்கள் நிரம்பியதால், உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
பல இடங்களில் சாலைகள், பாலங்கள் உடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப் பாதிப்பால் தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனா். மேலும் வீடுகள், தொழில் சாலைகளில் தண்ணீா் புகுந்ததால் அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் டி.ராஜேந்தர் லெவிஞ்சியபுரத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்த பின்னர் நடிகர் டி.ராஜேந்தர் காரில் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.