வேதாரண்யம்: நாகைப்பட்டினம் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் தளர்வு குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மத்தியக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காவிரி படுகையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை காலை ஆய்வைத் தொடங்கினர்.
தலைஞாயிறு அக்ரஹாரம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு புதன்கிழமை (பிப்.8) காலை 11.10 மணிக்கு மத்தியக் குழுவினர் வருகை தந்தனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 விவசாயிகளின் நெல் மூட்டைகளில் இருந்த நெல் மணிகளை எடுத்து ஈரப்பதத்தினை ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்க | கல்லீரலைக் காத்து, கண்பார்வையை அதிகரிக்குமா ‘கொடுப்பை’...?
சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த குழு அடுத்த ஆய்வு மையமான கச்சநகரம் புறப்பட்டுச் சென்றது.
மத்தியக் குழுவில் இடம் பெற்றுள்ள சென்னையில் உள்ள தொழில்நுட்ப தரக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் சி.யூனுஸ், பிரபாகரன் ,இதே துறையின் பெங்களூரு அதிகாரி ஒய்.போயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், வேளாண் இணை இயக்குநர் அகண்டராவ் உள்ளிட்டோர் இருந்தனர்.
தலைஞாயிறு அக்ரஹாரம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்.