சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு (திங்க்எடு) நிறைவடைந்தது.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் 11-வது கல்விச் சிந்தனை அரங்கு நேற்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய, மாநில அமைச்சா்கள், கல்வியாளா்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்று கல்வி, பொருளாதாரம், சினிமா உள்ளிட்ட தலைப்புகளில் கலந்துரையாடினர்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி, தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித், புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், மணீஷ் திவாரி, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.