வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பெரும்பாலாக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக கோயம்பேடு வந்தடையும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு செல்லும் என்றும் இதன் மூலமாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடதுபுறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.