விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் செவ்வாய்கிழமை சோதனை நடத்தினர்.
குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 10-ஆம் தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காப்பக உரிமையாளர் ஜிபீன்பேபி (48), மனைவி மரியாள் ஜிபீன் (45) உள்பட 9 பேர் மீது 13 பிரிவுகளின் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மேலும் காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள், மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையில், இப்பிரிவின் விழுப்புரம் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவினர், குண்டலப்புலியூரிலுள்ள காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: மேகாலயத்தில் வேட்பாளர் மரணம்: ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு
காப்பகத்திலுள்ள ஒவ்வாரு அறைக்கும் சென்று சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர் குழுவும் சோதனை நடத்தியது.