கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் அத்துமீறல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் அடக்குமுறை, அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கோவை சட்டக் கல்லூரியில் இளநிலைப் படிப்பு முடித்த மாணவி ஹரிதா, கல்லூரியில் சேரும் போது, நிர்வாகத்திற்கு வழங்கிய தனது “மாற்றுச் சான்றிதழ்” கேட்டு விண்ணப்பித்துள்ளார். மாற்றுச் சான்றிதழை வழங்கி, மாணவியின் உயர்கல்விக்கு உதவ வேண்டிய கல்லூரி நிர்வாகம் “மாற்றுச் சான்றிதழ்” அலுவலகத்தில் இல்லை என “கை” விரித்து, பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிக்க | கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலர் செல்போன் டவர் மீது ஏறி போரட்டம்!
இது குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, தற்காலிக நீக்கம் செய்வது உட்பட அடக்குமுறை நடவடிக்கைகள் ஏவப்பட்டு வருகிறது. இதனால் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
கல்லூரி நிர்வாகத்தின் எதிர்மறை நடவடிக்கைகளால் போராடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு மாணவர்கள் உரிமையை பாதுகாத்து, சுமூக சூழலை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.