சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் நடராஜர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வருகை தந்தார். அவரை கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொது தீட்சிசர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹோமசபேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர், ஆளுநர் மற்றும் அவரது மனைவியும் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். பொது தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பிரசாரத்தை வழங்கி, பொண்ணாடை அணிவித்து நடராஜர் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினர். பின்னர் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்தார். இதனையடுத்து கோயில் பொதுதீட்சிதர்கள் செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கோயில் பதிவேட்டில் சிறப்பாக தரிசனம் செய்தேன். மகிழ்ச்சியாக இருந்தது என ஆளுநர் எழுதி பதிவு செய்தார். பின்னர் அவர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார்.
சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவிப்பு
இதனையடுத்து தமிழக ஆளுநர் சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்குச் சென்றார். அங்கு நந்தனார் கல்விக்கழக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், விநாயக மூர்த்தி, அன்பு, கலிவரதன், டி.கே.எம்.வினோபா, ஈஸ்வர்லிங்கம் ஆகியோர் கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா சமாதியில் மலர் தூவியும், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
பின்னர், நந்தனார் மடத்தில் உள்ள செளந்திரநாயகி சமேதக சிவலோகநாதாரை தரிசித்து திரும்பினார். ஆளுநருடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதி உள்ளிட்டோர் உடன் வந்தனர்.