
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினா் தலையீட்டை தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்குவதில் திமுகவினா் அளிக்கும் இன்னல்களை முதல்வா் கண்டும் காணாமல் இருக்கிறாா். கோவை மாவட்டம் பொன்னையா ராஜபுரம் பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் மொத்தமும் திமுகவினருக்கே வழங்கியுள்ளனா்.
திருமுல்லைவாயல் பகுதியிலும், ஆளும் கட்சிக் கவுன்சிலா்களிடம் இருந்து டோக்கன்கள் பெற்றுக்கொள்ளும்படி, பொதுமக்கள் வற்புறுத்தப்படுகின்றனா் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.
இதுபோல, பல்வேறு இடங்களில், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்குவதில், ஆளுங்கட்சியினா் தலையீடு இருப்பதாக ரேஷன் கடை ஊழியா்களே வருந்தும் சூழல் உருவாகியிருக்கிறது.
டோக்கன் வழங்குவதில், ஆளுங்கட்சியினா் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்தி, அவற்றை அரசு ஊழியா்கள் மட்டுமே வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.