தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வளாகத்தை சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் ஜனவரி.15-ல் வருகிறது, அதே போல் அன்று தைத்திருநாளும் வருகிறது. இதனை முன்னிட்டு தைத்திருநாளையும், கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளையும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதன் முன்னோட்டமாக ஞாயிற்றுக்கிழமை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்.காட்சிக்கண்ணன் தலைமையில், இ.சலேத்து முன்னிலையில் சங்கத்தினர் வளாகப் பகுதியை சுத்தப்படுத்தினர்.
இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியது: ஜன.15 - ல் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க தலைவர்களான கள் இயக்கத் தலைவர் நல்லசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களை அழைத்து பொங்கல் வைத்து, கருத்தரங்கம், கவியரங்கம், ஆலோசனை கூட்டம் மற்றும் இனிப்புகள், சர்க்கரை பொங்கல் வழங்குதல் மரக்கன்றுகள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது என்றார்.
இதையும் படிக்க: திருமலை: நாளை விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு
பராமரிப்பு பணியின் போது, சங்க நிர்வாகிகள் தவமணி, ராதா கணேசன், சுனில் கவாஸ்கர், உப்பார்பட்டி திருப்பதி, குரங்கனி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.