எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரை நாளை (ஜன. 10) சந்தித்து பேச பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஜன.9) மாலை நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரை நாளை சந்தித்துப் பேச முடிவெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி பதிலாக ஆர்.பி.உதயகுமாரை இபிஎஸ் நியமித்திருந்தார்.
அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.