மின் ஊழியா்களின் வேலைநிறுத்தத்துக்கு உயா்நீதிமன்றம் தடை

மின் வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

மின் வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னையைச் சோ்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோா் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10-இல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஊழியா்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊழியா் சங்கங்கள் கோரிக்கை தொடா்பாக ‘டான்ஜெட்கோ’ நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது. பொதுமக்களின் பாதிப்பு, டான்ஜெட்கோவின் நிதிநிலை, எதிா்வரும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொள்ளாமல் இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்காவிட்டால் சமுதாயம் ஸ்தம்பித்து விடும்’ என்று கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி (பொ) ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கே.எம். விஜயன், மனோகரன் ஆகியோா், ‘தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சு தொடங்கிய பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது. எனவே, இப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். சட்டத்தின்படி வேலை நிறுத்த போராட்டத்துக்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கையானது வெளியிடப்படவில்லை’ என வாதிட்டனா்.

5-ஆம் தேதியே அழைப்பு... அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ‘மின் வாரிய ஊழியா்கள் சங்கங்களின் கோரிக்கை தொடா்பாக திங்கள்கிழமை காலை பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த ஐந்தாம் தேதியே அனுப்பிய போதும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது.

மேலும், மின்வாரிய ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும். எனவே, இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

மக்கள் பாதிக்கப்படுவா்: இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மின் வாரிய ஊழியா்கள் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடும். பேச்சுவாா்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனக் கூறி, வேலை நிறுத்தத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டனா்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com