சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில தொழிலாளர்கள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு தங்கிக் கல்வி பயிலும் மாணவர்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ளோர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
சர்வ மதத்தினர் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி பொங்கல் விழாவை துவக்கி கூட்டு வழிபாடு நடத்தினர். புதுப்பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். குறிப்பாக அனைத்து அலுவலர்களும் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியரும் வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு வெளிநாட்டவருடன் மாட்டு வண்டியில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வலம் வந்தார்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உரியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உறியடித்தனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: தமிழகத்தில் 5 நாள்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மாயிலாட்டம், ஒயிலாட்டம் என கலைக்கட்டிய இந்த பொங்கல் திருவிழா சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத்தினரையும், அனைத்து சமூகத்தினரையும், அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமை பொங்கலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.