நாமக்கல்: நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீட்டு குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2011 முதல் 2021 வரை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவருடைய வீட்டில் கடந்த ஆண்டு ஆக. 12-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் 28-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் இரவு வரையில் சோதனை நடைபெற்றது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகள் குழு முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பு தொடர்பாக நிலங்களை அளவீடு செய்யும் பணியை காலை 11 மணிக்கு தொடங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி ஆகியோர் நாமக்கல் சுவாமி நகரில் உள்ள பாஸ்கர் வீட்டு ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின்போது கே.பி.பி.பாஸ்கரிடம், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் நல்லம்மாள் விசாரணை மேற்கொண்டார்.