வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்: ஓபிஎஸுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் 

வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்கிற ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுத்துள்ளார். 
வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்: ஓபிஎஸுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் 
Published on
Updated on
2 min read

வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்கிற ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்றாக 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

          இத்திட்டத்தினை பொங்கல் 2023-க்கு செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் 09.09.2022 அன்று வழங்கியும் மற்றும் அதற்காக மொத்தம் ரூபாய் 487.92 கோடி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

          இத்திட்டத்தின் கீழ் 177.64 இலட்சம் சேலைகள் மற்றும் 177.23 இலட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய வருவாய் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது. அதனடிப்படையில் கைத்தறி/ விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

          வேட்டி சேலை உற்பத்திக்கு தேவைப்படும் பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் இரகங்களில் 40s சிட்டா, 60s கோன், 40s கோன் நூல் கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது போக எஞ்சிய தேவைப்படும் நூல் இரகங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கும் குழு மூலம் 23.09.2022 அன்று இறுதி செய்யப்பட்டு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டது.

          கோ-ஆப்டெக்ஸ் தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் ஆகிய நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு 01.11.2022 முதல் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டது.

          வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ள தேவைப்பட்டியலின் படி அனைத்து தாலுகாக்களுக்கும் மேற்படி வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணிகளை 15.12.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

          இத்திட்டத்தின் கீழ் 27.01.2023 தேதியில் 137.66 இலட்சம் சேலைகள்        (77.5 %)      மற்றும்   112.81      இலட்சம்      வேட்டிகள் (63.7%) துறையின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.   அவற்றுள் 122.78 இலட்சம்  சேலைகள் (69.11%) மற்றும் 97.02 இலட்சம் வேட்டிகள் (54.74%) பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வருவாய்த் துறை தேவைப்பட்டியலின்படி அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

        பொங்கல் பண்டிகைக்கு முன்னரே 09.01.2023 அன்று தமிழ்நாடு முதல்வரால் சென்னை, மயிலாப்பூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சத்தியா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் விநியோகிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. எனவே, வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.

         பொங்கல் 2013 பின்னர் நடப்பாண்டில் 10  மாறுப்பட்ட வண்ணங்களில் 15 விதமான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுடன் தரமான சேலைகளும் 5 மாறுபட்ட வண்ணங்களில் 1 அங்குல கரையுடன் கூடிய தரமான வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

          வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பொறுத்தவரை திட்டத்திற்கு தேவையான அனைத்து சேலைகள் மற்றும் வேட்டிகள் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி/ விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நமது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடங்கிய 1983-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆண்டுகளிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகள் தவிர நடப்பாண்டு வரை  மாநிலத்தில் மட்டுமே வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிச்சந்ததையில் வேட்டி சேலைகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணி துவக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில்தான் நிறைவு செய்யப்படுகிறது.

 அதைப்போலவே, நடப்பு 2023ஆம் ஆண்டிற்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள்  துவக்கப்பட்டு, இத்திட்டம் வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும் என்பதே உண்மை. 

ஆனால் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இலவச வேட்டி சேலை வழங்கும் பணி 2013ஆம் ஆண்டிற்கு 14.3.2013-லும், 2014ஆம் ஆண்டிற்கான பணி 25.8.2014-லும் முடிவடைந்துள்ளது. இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டார்.

வேட்டி சேலை விநியோக திட்டம் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com