கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை ஒரே நாளில் 1,511 கனஅடியாக அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை 400 கன அடியாக வந்து கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை 601.93 கன அடியாகவும், அன்று பெய்த பலத்த மழை காரணமாக, புதன்கிழமை அணைக்கு வினாடிக்கு 2,112.98 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 1,511 கன அடி தண்ணீர் அதிகரித்தது, நீர் மட்டம் சுமார் 1 அடி உயர்ந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அணை நிலவரம் :
புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 115.80 அடி (மொத்த உயரம் 152 அடி ), அணை நீர் இருப்பு 1,817.00 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 2,112.98 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256.00 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 87.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 60.00 மி.மீட்டர் மழையும் பெய்தது.
தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு:
தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 400 கன அடியாக இருந்து, புதன்கிழமை அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், தண்ணீர் திறப்பு 256 கன அடியாக இருந்தது.
இதுகுறித்து பொறியாளர்களிடம் கேட்ட போது, அணையின் நீர்மட்டம் உயர்த்துவதற்காக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட நீர்வரத்து பகுதிகளில் மழை காரணமாக நீர் வரத்து ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும் என்று தெரிவித்தார்.