நாகப்பட்டினம்: சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை சிக்கல் நவநீதேசுவர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சிங்காரவேலவர் கோயில் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமி, அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த ஸ்தலம் ஆகும்.
சிக்கல் சிக்கல் சிங்காரவேலவர் கோயில் 1932, 1961, 1991, 2004 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவென இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்து கடந்த 2021 செப்டம்பர் 9 ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடங்கின.
ராஜகோபுரம் பஞ்சவர்ண பூசுதல், நவநீதேசுவரசுவாமி, வேல்நெடுங்கண்ணி அம்பாள், சிங்காரவேலவர், கோலவாமனபெருமாள், கோமளவல்லி தாயார், வரதஆஞ்சநேயர் விமானங்கள் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றன.
கருங்கல் சுவர்களில் உள்ள சுண்ணாம்பு காரைகளை அகற்றி உள்புறம், வெளிப்புறம் பிரகாரங்கள் தரைத்தளம் மற்றும் மதில்சுவர் ஆகியவை பழைமை மாறால் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் ஜூலை 2- ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நான்காம் கால யாக பூஜையில் திருவாடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.
சிவன், பெருமாள் சாமிகளுக்கு குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற பூஜைகளை தரிசனம் செய்தனா்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவநீதேசுவரருக்கு 51 யாக குண்டங்களும், 19 வேதிகைகளும், கோலவாமன பெருமாளுக்கு 16 யாக குண்டங்களும் 10 வேதிகைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், புதன்கிழமை (ஜூலை 5) ஆறாம் கால யாக பூஜையை தொடா்ந்து பரிவார கும்பாபிஷேகம், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு ராஜ கோபுரங்கள் மற்றும் அனைத்து விமானங்கள் கும்பாபிஷேகம், காலை 10.10 மணிக்கு ஸ்ரீசக்தியாயதாக்ஷி உடனமா் ஸ்ரீநவநீதேசுவர சுவாமி மூலஸ்தானங்களுக்கும், ஸ்ரீ சிங்காரவேலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாஷேகத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.