ஊழல் வழக்கு: மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர், முதுநிலை ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை!  

ஊழல் வழக்கில் மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் மற்றும் முதுநிலை ஆய்வாளருக்கு ஊழல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
ஊழல் வழக்கு: மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர், முதுநிலை ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை!  

                   
திருச்சி: ஊழல் வழக்கில் மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் மற்றும் முதுநிலை ஆய்வாளருக்கு ஊழல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

2008 ஆம் ஆண்டு திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு, உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம்  தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.

உரிமம் வழகுவதற்கு அப்போதைய மருந்துக் கட்டுப்பாடு திருச்சி உதவி இயக்குநர் பார்த்திபனும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியமும் தங்களுக்கு கையூட்டாக ரூ.7,000 வழங்க அன்பரசுவிடம் கேட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பரசு அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இராம.அம்பிகாபதியிடம்(ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அம்பிகாபதி, அன்பரசுவை 2008 மே 19 ஆம் தேதி லஞ்சப் பணத்துடன் அனுப்பியதில் பார்த்திபனும் சிவபுண்ணியமும் அந்த பணத்தை வழக்கம் போல் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருந்தகத்தில் கொடுத்து விடுமாறும் தாங்கள் பின் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். 
அதன்படி, அன்பரசு அந்தப் பணத்தை அந்த மருந்தகத்தின் விற்பனையாளர் சேகரிடம் கொடுத்தார். அப்போது தன் குழுவினருடன் சென்ற துணைக் கண்காணிப்பாளர் அம்பிகாபதி,  பார்த்திபன், சிவபுண்ணியம் மற்றும் சேகர் ஆகியோரைக் கைது செய்தார்.

இவ்வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

தற்போதைய திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விசாரணை முடிந்து இவ்வழக்கில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 6)உதவி இயக்குநர் பார்த்திபனுக்கு 4  (3+1) ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,  ரூ.20,000 அபராதமும், சிவபுண்ணியத்திற்கு 4 (3+1) ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், சேகருக்கு 3  ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கிற்கு முன்னதாக உதவி இயக்குநராக பார்த்திபன் கோவையில் பணியாற்றிய போது ஊழல் வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதும், முதுநிலை ஆய்வாளர் சிவபுண்ணியம் முன்பு சிவகங்கையில் பணியாற்றியபோது அவர் மீது ஊழல் புகார் காரணமாக, விசாரணை செய்யப்பட்டு அவர் மீது தீர்ப்பாயத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com