சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் மேட்டூர் மைசூர் சாலை போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மூலக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் 500க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூலக்காடு ஊராட்சியில் செல்வந்தர்கள் அரசு மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்களின் குடும்பத்திற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களது வேலை வாய்ப்பு அட்டையில் முத்திரை குத்தப்பட்டது.
இதனால் உண்மையிலேயே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை கண்டித்தும், செல்வந்தர்களுக்கும் வசதியானவர்களுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் மைசூர் சாலையில் விராலி காடு அருகே இந்த மறியல் நடைபெற்றது. இதனால் மேட்டூர் மைசூர் சாலை போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து, கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் அரசுப் பணியில் இருப்பவர்களை சேர்த்தது குறித்து விசாரணை நடத்துவதாகவும், உண்மையான பயனாளிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.