சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்ட புகாரில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவிலில் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
சாதி, மத ரீதியான சொற்களைப் பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட சண்டை பயிற்சியாளரான கனல் கண்ணன், இந்து முன்னணி நிர்வாகியாகவும், பாஜக ஆதரவாளராகவும் செயல்பட்டு வருபவர்.
இவர் சமீபத்தில், மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் விடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விடியோ தமிழ் பாடலுடன் எடிட் செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய ஹிந்து மக்களே சிந்தியுங்கள்! என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்தப் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அவரின் இந்தப் புகாரின் அடைப்படையில் 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.