அவிநாசி: அவிநாசி புறவழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை இரவு பலியானார். மேலும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
சேலம் மேட்டூரைச் சேர்ந்தவர் வினோத்(18). இவர் கோவை தனியார் கல்லூரியில் (பி.டெக்) முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில், இவருடன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஈரோடு, அந்தியூர் வேலம்பாளையம் தாலக்குட்டைப்புதூரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சுஜய்(18) மற்றும் முருகவேல் மகன் வசந்த்(18) ஆகியோர் கோவையில் இருந்து அவிநாசி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி ஓட்டுநர் எவ்வித சைகையும் செய்யாமல் திடீரென லாரியை நிறுத்தியதால், பின்னால் சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த வினோத் கோவை அரசு மருத்துமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் பலத்த காயமடைந்த சுஜய், வசந்த் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.