புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் உள்ள மனநலக் காப்பகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து விடியோ பதிவிட மருத்துவத்துறை அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த மனநலக் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கிருந்த மோசமான சூழலைப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து முறையாக ஆய்வு மேற்கொள்ளாத ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கே. ராமுவை இடைநீக்கம் செய்தார். அன்னவாசல் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக அங்கிருந்த 59 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்கு புதன்கிழமை காலை மாற்றப்பட்டனர்.
அவர்களை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்:
“மாநிலம் முழுவதும் அனைத்து மனநலக் காப்பகங்களையும் சுகாதாரத் துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள தேவைகள் சரி செய்யப்பட வேண்டும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.