

பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூலை 22) தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. 2023 – 2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஜூலை முதல் வாரத்தில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மருத்துவ கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், பொறியியல் மாணவா் சோ்க்கை ஜூலை 22 இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் சனிக்கிழமை (ஜூலை 22) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாளான இன்று சனிக்கிழமை, அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
விளையாட்டுப் பிரிவு மாணவா்களுக்கான 38 இடங்களுக்கு 226 பேரும், முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களுக்கு 89 பேரும், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான 579 இடங்களுக்கு 26 பேரும் (7.5 சதவீத இடஒதுக்கீடு) கலந்தாய்வில் பங்கேற்கின்றனா்.
இதைத் தொடா்ந்து சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.