திருவாரூர்: மன்னார்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கம்பங்குடி வளைவு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (30). இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து கம்பங்குடி வளைவை நோக்கி திருத்துறைப்பூண்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, செம்மொழி நகர் எனும் இடத்தில் முன்னாள் சென்ற லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், கார்த்தியின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்துபோன கார்த்திக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.