
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றுமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கரின் உருவப்படங்களை நீதிமன்றங்களில் வைக்க அனுமதி கோரி பல்வேறு வழக்குரைஞர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே பிரச்னையானது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதன் சம்பந்தமான அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தது. நீதிமன்றங்களில் தலைவர்களின் உருவப்படங்கள் வைத்தால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என மார்ச் 11, 2010 அன்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், 2013 ஏப்ரல் 27 ஆம் தேதி, அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்க கூடாது எனவும் தெரிவித்தது.
மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் தவிர, வேறு எந்த தலைவரின் உருவப்படங்களையும் நீதிமன்ற வளாகத்திற்குள் வைக்கக்கூடாது என்று சமீபத்தில் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்து இருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் உத்தரவை மீறினால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.