நீதிமன்றங்களில் அம்பேத்கா் உள்ளிட்ட எந்த தலைவா்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுா்வாலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீதிமன்றங்களில் அம்பேத்கா் புகைப்படம் அகற்றப்படவுள்ளதாக செய்தி பரவியதைத் தொடா்ந்து, முதல்வா் மு.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்காபுா்வாலாவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
தலைமை நீதிபதியிடம் அம்பேத்கா் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சா் ரகுபதி கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தாா். தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவா்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தாா். இத்தகவல் வழக்குரைஞா் மன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.