நாமக்கல்: கொல்லிமலையில் கரடி தாக்கியதில் முதியவர் உள்பட இருவர் வியாழக்கிழமை அதிகாலை பலத்த காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு அருகே கரையான் காடு பகுதியைச் சேர்ந்தவர் காளி கவுண்டர்(70). இவரது பக்கத்து வீட்டுக்காரர் பழனிச்சாமி(47). வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் இருவரும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக விவசாயத் தோட்டம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த கரடி பழனிச்சாமி, காளிக்கவுண்டர் இருவரையும் தாக்கியது.
அதனிடம் இருந்து தப்பித்து ஊருக்குள் அலறி அடித்து ஓடி வந்த அவர்கள் அங்குள்ள மக்களிடம் தெரிவித்து கரடியை விரட்டி அடித்தனர்.
இதில் பழனிச்சாமிக்கு கைகளிலும், காளிக் கவுண்டருக்கு முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினர், வாழவந்தி நாடு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.