ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரை மாற்றக்கோரி வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் நியமிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையில் கோயில் வருவாய் உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு தரிசினம் செய்ய கட்டணம் உயர்வு, தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் தடுப்பு அமைத்துள்ளதால் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உள்ளுர் பொதுமக்கள் தரிசனம் செய்ய செல்லும் வழக்கமான பகுதியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமைவாய்ந்த கோயில் சில இடங்களை உடைத்து கட்டுமானம் ஏற்படுத்துவது என ஆகமத்திற்கு எதிராக செயல்படுவதாக பக்தர்கள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இணை ஆணையரை மாற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று திங்கட்கிழமை ஒரு நாள் முழு அடைப்பு பொதுவேலை நிறுத்தம் அறிவித்து நடைபெற்று வருகிறது. இதனால் ராமேசுவரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உணவு விடுதிகள், டீ கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் டீ கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாத நிலையில் கோயிலில் தரிசனத்தை முடிந்த பக்தர்கள் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.