பெருமாநல்லூர் அருகே தீண்டாமை சுவர்: இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை

பெருமாநல்லூர் அருகே  முட்டியங்கிணறு பகுதியில் உள்ள தீண்டாமைசுவர் குறித்த பேச்சுவார்த்தை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருமாநல்லூர் அருகே தீண்டாமை சுவர்: இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
Updated on
1 min read

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே  முட்டியங்கிணறு பகுதியில் உள்ள தீண்டாமைசுவர் குறித்த பேச்சுவார்த்தை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முட்டியங்கிணறு ஆதி திராவிடர் காலனி உள்ளது. இக்குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி, தனியார் வீட்டு மனை விற்பனையாளர் தீண்டாமைச்சுவர் அமைத்துள்ளனர்.

மேலும் சுவற்றை ஒட்டி சாக்கடை நீர்  வருவதால், காலனியில் உள்ள பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், உடனடியாக சுவற்றை அகற்ற வேண்டும் எனக்கூறியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர்  சுந்தரம் தலைமை வகித்தார். அவிநாசி காவல்துறை கண்காணிப்பாளர் பவுல்ராஜ்,  பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  இரு தரப்பினர் பங்கேற்றனர். 

இதில்,  வீட்டு மனை பிரிவு உரிமையாளர், சுற்றுச்சுவரை மேலும் பலப்படுத்தி தருவதாக கூறினார். இதற்கு, மறுப்புத் தெரிவித்த காலனி மக்கள், உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர். 

நிறைவாக வட்டாட்சியர் கூறியதாவது, இரு தரப்பினர் கருத்துகளும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் வழக்கு விசாரணை 15ஆம் தேதி வர உள்ளது. ஆகவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

தீண்டாமை சுவர் குறித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில், இரு தரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றோர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com